வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

சாய்ந்தமருதூர்............!

                                      
சாய்ந்த மருதூரில் பிறந்து உளமகிழ்ந்தேன்..............
ஆய்ந்து பார்த்தேன் என்னூர் சரித்திரத்தை
சாய்ந்த மருதென்று பெயர் வந்த தெவ்வாறு?
கேட்டேன் ஒருவரிடம்
அவர் பொழிந்தார்
அந்நாளில் ஊர் முகப்பில்
மாபெரிய மருத மரம்
சாய்ந்த படி நின்றதென்றார்
பதிலெனக்குத் திருப்தியில்லை
ஊரெல்லாம் சுற்றி வந்தேன்
உவகையினால் உள்ளம் குளிர்ந்தேன்

முக்காட்டு முகில் திரைக்குள்
முழு நிலவாய் எழில் முகங்கள்
தக்காளிப் பழக கன்னம்
தங்கமென அங்கங்கள்
மிக்கவுயர் பண்பாட்டு வாள் முகட்டில்
மின்னுகின்ற தாரகைகள்

வெற்றிலையின் சிறப்புக்கு
விளம்பரமாய்ச் செவ்வாய்கள்
கற்றறிந்தோர் மெத்தக்
கனத்திருத்தல் கண்டுணர்ந்தேன்!
சுற்றமென வரவேற்பு
சுவையான விருந்தோம்பல்
நற்றவ மாயத் தமிழங்கு;
நல்லபடி வாழக் கண்டேன்..

பள்ளிகளில் நின்று பாங்கோசை காற்றில் வரும்
உள்ளத்தில் பரவசத்தை ஊட்டி விடும்
முன்னாள் கடைத் தெருக்கள்
முழுப் பொருளும் அங்குண்டு
கல்வி நிலைய முண்டு
கவி வளமோ மெத்தவுண்டு!

நெல்லை மழையெனவே
நிலத்தில் சொரிகின்ற
நல்ல கர வாகு வட்டை
கடலாய் விரிந்திருக்க....
மருத நிலத்தெழிலே மனதார நான் ரசித்தேன்
மருத நிலந்தன்னை மருவி நிற்குங்
காரணத்தால்!

சாய்ந்த மருதூர் தான்
சாய்ந்த மருதாகியதோ.....?
என்னுள் வினவிய நான்
இனிதாய் விடை பெற்றேன்
மண்ணில் மருதூரும்
மகிமையுடன் வாழட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக