ஞாயிறு, 12 மே, 2013

உலகின் அனைத்து அன்னையர்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்......!




பத்து மாதம் சுமந்தே என்னைப்

பரிவுடன் வளர்த்தவள் அன்னை!

இத் தரை தன்னில் இவளருந் தியாகம் 

எழுந்தே தொட்டிடும் விண்ணை !


கண்ணே ! என்று இமையைப் போலவே

காத்திருப்பாள் இவள் நிதமே !

பொண்ணே என்றும் பூவே என்றும்

பொழியும் அன்போர் விதமே !


ஈயோடெறும்பு எதுவும் அணுகா(து)

இனிதாய் வளர்த்த உள்ளம்

தோயும் அன்புச் சுடராய் என்னைத்

துலங்க வைத்தாய் உய்வோம் !


பள்ளிப் பாடம் சொல்லித் தந்தே

பண்பாய் அனுப்பி விடுவாள்

வெள்ளி பூத்தே விடியும் வானாய்

விளங்க அனைத்தும் இடுவாள் !


பட்டம் பெற்றே பதவிகள் பெற்றுப்

பாரினில் துலங்க வைத்தாள்

தொட்டுப் பேசித் துணையாய் நிற்கும்

தூய உள்ளம் அன்னை !


உதிரந் தன்னைப் பாலாய் உதிர்த்து

ஊட்டி வளர்த்தவள் அன்னை

இதயத் தரையில் வாழும் உள்ளம்

இவளை மறேவேன் மண்ணில் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக