ஞாயிறு, 25 டிசம்பர், 2011

வாலிபத்தின் வருடலிலே
இருதயத்தின் இரத்தத்தை
உறிஞ்சிக் குடிக்கின்ற
உஷ்ன நினைவுகளே!
உங்களுக்கு
இரக்கமென்பதில்லையா?

இரவுகளிலெல்லாம்
என் விழிகள்
உறக்கத்தை ஒத்திவைத்துவிட்டு
தலையணையை
ஸ்நானஞ் செய்து கொண்டிருக்கிறதே!
ஓ..........
அழுவது,அவன் எனக்களித்த
ஆயுட் தண்டனையா....?
நான் ஏமாற்றத்தின்
ஆயுட் கைதியா...........?
"காதல்"
இந்த
அந்தரங்க முடிச்சுக்கள்
ஆத்மாவின்
அந்தங்களிலா போடப்படுகின்றன?
அவன்
கேட்டானே - அன்று
என்னை மறந்து விடு என்று
அவனுக்கு மட்டும்
எந்த அரங்கில்
இந்த முடிச்சுக்கள்...?

காதலினை
கெட்ட கனவு என்று
மறப்பதென்றால்
பூட்டி வைத்த ஆசைகளை
பொசுக்குவதா...?

என்
இதயச்சுவர்களிலே
எதிரொலிக்கும்
அவனின்
சில்லறைச் சிரிப்பொலிகள்
என் செவிகளை
இறுக மூடியும்
இன்னும்
செவிபட ஒலிக்கிறதே!

அன்றைய கனவுகளே!
அடிக்கடி
உங்கள் வருகையினால்
கண்கள்
பெருக்கிக்கொண்டிருப்பது
கண்ணீரல்ல - அவை
காதல் ரணங்களின் கருக்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக