ஞாயிறு, 6 ஜனவரி, 2013

என் இதயத்துக்குள்
இன்னொரு இதயம்
அது நீ ...

உன்னாலே என் எழுத்து
வாழ்கிறது.

அழகானவை எல்லாமே
எனக்கு உன்னைத் தான்
ஞாபகப்படுத்துகின்றன.

உன் சோகத்தை
நான் அறிந்த போது தான்
என் சோகத்தில் அது
இரண்டரக் கலந்தது.
உன் கண்ணீரைக் கண்ட
என்மனம் வெந்து
உருகியது.

என்னைப் பார்த்து நீ
சிரிக்க மாட்டாய்
நீ சிரித்த நாளாவது
யார் ஞாபகத்திலும் இல்லை.
நான் உனக்கு
செருப்பாக இருப்பேன்
நீ அணிந்து கொள்வாயென்றால்

தினம் தினம் நீ
கண்ணீர் வடிக்கிறாய்
இதயத்தைப் புதைத்துக்
கொண்டு.

நான் உன்னைக்
காணும் போதெல்லம்
விழி மூடிக் கொள்கிறாய்.

நீ வசிப்பதனாலோ என்னவோ
என் கவிதையும் வளர்கின்றது.

உன் முகத்திலுள்ள
பருவாக நான் ஒட்டி நிற்கிறேன்
தினம் தினம்
உன்னை முத்தமிட.
சிலுவையாக உன் முகத்தில் அரைந்த
ஆணியை கழற்றி

வீசாதே அது நான் தான்.

சோகக் தீயால்
என்னைத் துரத்தியதால் என் முகம்...

உன் வெறித்தனமான
சோகத்தில்
கிழிந்த உன் இதயத்திலிருந்து
வடிந்த குருதியை
என் பேனாவின்
மையாகப் பயன்படுத்தினேன்.
உன்னை நான்
தொடர்ந்த குற்றத்திற்காக
உன் இதயத்தைப்
பூட்டி நீ வைத்தது கூட
எனக்கு ஒரு
தண்டனை தான்....
நீ நடத்தும் புரியாத
அந்த சோக நாடகவெறியில் நான்
தீயில் கரியாகினேன்.....
பலர் என்னை
விரும்புகிறார்கள்
எல்லோர் வாழ்விலும்
ஒரு சோக அனல்
புதைந்து சுடுவது தான் அதிசயம்.
பாவம் நான்
என் இதயத்தை
யாருக்கும் கொடுக்கவும் முடியாமல்
பலரால் வாங்கவும் முடியாமல்
அவதிப்படுவதை உணர்கிறேன்...

என் மனம் எப்படித் தாங்கும்
உன் சோகங்கள்
என் மனதையும்
நெறுக்கிப் பிழிகின்றது.
உன் மனமும்
என் உயிரும்
எழுத்தில் தான்
சங்கமம் ஆகின..
எத்தனை காதலர்கள்
ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள்.
நானும் நீயும்
சந்திக்காத சங்கமமே...

நீ விரும்பும் எதையும் செய்வேன்
உன்னை மறக்க மட்டும் சொல்லாதே...

நீ இன்றி என்மனம்
எப்படி வாழும்
என் இதயம் உன்
சோகங்களைத் தாங்கும்
துலாபாரம் ஆகும் போது.

நீ வேதனைப்பட வேண்டும்
உன்னை ஆதரித்த நானே
உன்னை மறந்தால்.

நான் அனுப்பிய
வெற்று அஞ்சலை ஏன் நீ
திருப்பிவிட்டாய்.
அதில் இருந்தது
என் வெறுமையான இதயமே.

உன் தனிமையே
உனக்கு ஒரு நோய்.

என்னை பதுக்கி வைத்துக் கொண்டு
ஏன் இன்னும்
விரதம் இருக்கிறாய்.

இத்தனை சோகங்களுக்குள்ளும்
உன் சிரிப்பைக் காண
முடியாது தான் அவஸ்தை.

உன் இதயத்தில்
எதைத்தான் பூட்டி
வைத்திருக்கிறாய்
எதையுமே என்னால்
புரியமுடியவில்லை.

உன் சோகத்திற்கு
ஒரு படி வெடிக்க
இடம் கொடு
தேடிப்பார்க்கிறேன்
அந்த ஓட்டையில்
உன் இதய அண்டாவை..

என் எழுத்துக்களை
வரவேற்ற நீயே
வழியனுப்பி வைத்தாய்

என் கருவே நீயான
போது எக்கருவறைதான்
இனி என்னை ஏற்கும்...?

எப்படி நம்புவது
உன் மெளத்தின் பின்னால்
இப்படியொரு பாதாளம்
இருக்கும் என்று...

உன்னைத் தேடினேன்
என் எழுத்தைத்
தொலைத்து விட்டு
பேனாவையை ஏன்
திருடினாய்?

யன்னல்களைக் கூட
இருக்க மூடிக்கொள்கிறாய்.
ஏன் என் வாசம்
உன்னைத் தேடும் என்றா?

உன் வாழ்க்கைக்கு
வெளிச்சம் தேடினேன்
இறுதியில்
அந்த வெளிச்சத்திலே
எனனை நான்
தொலைத்தேன்.

நீ நிராகரித்தாலும்
உன்னை நான்
தொடராமல் விடுவேனா
இரவெல்லாம் ஒரு கனவு
நீ என்னைக் காதலிப்பதாக.

இப்போது நீ சிரிக்கிறாய்
அது தான்
உன் முற்றத்து மல்லிகைகள்
பூத்து மனம் பரப்புகிறது.

என்னால் நீ குணமானாய்
உன் நோயை
எனக்குப் புகுத்திவிட்டு.

நீ எனக்குக் கிடைக்க
முதலே தொலைத்ததாக
நான் தூரத்தில் இருந்து
அவதிப்படுகிறேன்.

உனக்கும் எனக்கும் உள்ள
தூரம் எத்தனை ஜென்மங்கள்.
அவ்வாறு இருந்தும்
என் இதயத்தில் நீ வாழ்ந்தாய்.

உன் சோகத்தை
ரகசியமாய் விசாரித்தேன்.
தெரிந்தும் கை விரித்தவர்கள் பலர்.

நான் வெட்கப்படுகின்றேன்
என் எழுத்துக்களாய் உலகை
வென்ற நான்
உன்னிடம் தோற்றுப் போனேன்....

உன்னில் அப்படியென்ன
பிடிவாதம்
உன்னை விரும்பிய
என்னையே தோக்கடிக்க.
என்னை விடவும்
ஊணமான உன்னை
நேசிக்க எவள் வருவாள்.

நீ சிரித்து வாழ
என் இதயம் திறந்தேன்
களவு போனது
என் இனிய கவிதைகள்.

உன் அழகையே அந்த
ஆபத்து மாற்றியது
அந்த இதயத்திலே
இளைப்பாறுகின்றது என் ஜீவன்....

உன் வார்த்தைக்குப் பஞ்சம்
உன்னை வாழ வைக்க
உன் சோகம் தீர்க்க
உன்னிடமே பிச்சை கேட்கிறேன்.

நான் எதிரில் வரும் போது
நீ குனிவதில் நியாயங்கள் உண்டு....
ஏனென்றால்
உன் நோய் தீர்த்த வைத்தியர்
நான் தானே....?

எதிர்பாராத நேரத்தில்
நீ என்னைக்கரம்
பிடித்தாய்.
முத்தமிட அணைத்தேன்
என் கைதான் சுட்டது.
நான் தொட்டது நெருப்பு..

நீ பாய்ததால்
செத்துப் போவது
நான் மட்டுமல்ல என்
எழுத்துக்களுமே.

அழுது ஏன் வழிகிறாய்
நான் குடியிருப்பது
உன் கண்ணில் .
கண்ணீரைக் குடிப்பதற்கே.

இனி தீர்ந்தது
உன் நோய்
அதற்குப் பரிசாக
உன் இதயத்தை எனக்குக்
கொடு....

நீ தப்பிக்க முடியாமல் என
சுவாசவழியையும் மூடிடுவேன்.

நீ எப்படியோ நானும்
அப்படியே
உன் சோகத்தில்
என்னைப்புதைத்த
நாள் முதலாய்..

எப்படியும் நீயும் நானும்
தொடர்புபட்டோம்
எழுத்துக்களால்
காதலாக
நட்பாக
எதிரியாக.
நோயாளியாக,வைத்தியராக.

எதுவாக இருந்தாலும்
என்னால் குணமானது
உன் இதய நோய்.

கடைசியாக எனக்கு ஒரு கவிதை
நீ எழுதியனுப்புவாய்
நீ காதலித்தது
என்னையல்ல
என் கவிதைகளையே என்று.

நீ மங்கிப் போனாலும்
உன் நினைவில் வடித்த
என் எழுத்துக்கள்
நூலாகச் சுமர்ந்து வரும்
அப்போதாவது புரிந்து கொள்வாய்
உன் இதயத்தில் நான் வாழ்ந்தது.

உன் பைத்தியத்திற்கு
வைத்தியமான என்னை
பைத்தியம் குணமானதும்
மறந்து விட்டாய்.

என்னைப் போல
துரதிஷ்டக் காரி பிறக்கவே கூடாது.......

இனி

உன் நினைவுகளைச் சுமர்ந்த

உனக்கும் எனக்குமிடையில்

ஒரு முற்றுப்புள்ளி தான்

அந்தரங்க முடிச்சுக்களாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக