புதன், 17 ஜூலை, 2013



சுவர்(க்)கம் நரகம் மறுமைவாழ்வில் தான் 
தெரியுமென்பதை 
மறுக்கின்றேன் நான் !

கண்களை மூடினால் சுவர்க்கம் 
கண்களைத் திறந்தால் நரகம் !

பஞ்சமா பாதகங்களும்
நன்மை தீமைகளும்
அன்பும் ஆதரவுகளும்
போட்டி பொறாமைகளும்
தொழுகை நோன்பும்
இந்த உலக வாழ்வில் தான் !

உலகில் -வாழும் மானிடர்களின் மனங்களில் தான்
சுவர்க்கமும் நரகமும்!

மறுமையில் அல்ல
என்பதை -
மறுக்கின்றேன் நான் !

சரித்திர வரலாறுகளில்......
இலங்கை -இங்கு
ஆதி பிதா ஆதம் (அலை ) அவர்களின்
பாதம் பட்ட மண்ணாக படித்துள்ளேன் !

ஆனால் இன்றோ
பேய்களும் பேசாசுகளும்
தீவிரவாதமும் அடாவடித் தனங்களும்
மண்ணில் பந்தாய் விளையாடுவதும்
இங்கு -
ஒரு விளையாட்டு அல்லவா ?

தொல்லைகள் சுமந்து வரும்
உள்ளங்களின் வருகையால்
இப்போதெல்லாம்
நல்ல மனசுகள்
காணாமல் போகின்றது !

நோன்பு காலங்களில் தொழும்
தராவிஹ் தொழுகை கூட
மாற்றம் கண்டு
மாறிப் போகின்றன !

சில ஈமானியர்களின்
மனங்களில் பதியாத
திருமறை வசனங்களை
அடுத்த மதத்தவர்கள்
அறிந்து கொள்வதற்காய்
புரிந்து கொள்வதற்காய்
ஆராச்சி செய்கின்றனர் !

சாதி மத பேதம் வேண்டாம்
என்று -
இலக்கணம் கூறியவர்களே -இன்று
காடைத் தனத்துக்கும்
வேற்றுமைக்கும்
மத பேதங்களுக்கும்
தீவிர வாதிகளாய் நிற்கின்றனர்

அருளப்பட்ட
அல் - குர் ஆன் வரிகளை
ஓதாதவர்கள்
புரியாதவர்கள்
அறியாதவர்கள்
குருதித் துளிகளைத் தான்
தேயிலையாய் -
தாகம் தீர்த்துக் கொள்கின்றார்கள் !

பெண் ஆத்மாக்களின் .......
உயிரை விட மேலான -கற்பு
அழிக்கப் படாமலிருக்கட்டும் !

இன்னுமொரு சமூகம்
இறந்து போகாமலிருக்க !
புதைந்து போகாமலிருக்க !!

அல்லாஹ்வின் அற்புதத்திலிருந்து
கருவாகி உருவாகி வந்தவர்களே

" அல்லாஹ்வுக்கு அடி பணிவோம்"என்று கூறிக் கொண்டு
அடுத்தவர்களையல்லவா
அடித்து உதைக்கின்றீர்கள் ?

அப்பாவி உள்ளங்களின் கண்ணீரால்
இப்போதெல்லாம் -
வரண்டு போன பாலைவனப் பூமி கூட
ஸம் ஸம் நீராய் ஊற்றெடுக்கின்றது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக